Monday, February 25, 2013

அங்கும் இங்கும்!...

Photo: Channel4

                      அங்கும் இங்கும்!...

  • நாற்றமெடுக்கும் நகரத்தின்
         நாற்சந்தியெங்கும் -
         மனிதநேயம் மரித்ததன்
         மொத்த வாடை!...

  • எஞ்சியிருந்த எதார்த்தமும்
         செத்துப்போனதில்,
         வந்தமர்ந்த வல்லூறின் வாயெங்கும்
         செங்குறுதிச்சிதறல்கள்!....

  • தென்கிழக்கில் திரண்டுவந்த
         கார்மேகத்தின்
         பிண்ணணியில்கூட -
         போர்மேகத்தின் வர்ணம்!….

  • சிறுநீர் கழிப்பதுமுதல்
         சிறுவர் கடத்தல்வரை,
         சில்லரை பார்க்கத்துடிக்கும்
         வல்லூறுகளின் பேரிரைச்சல்!...

  • பள்ளிச்சிறார்களையும்
         பால்வெறிக்குப் பாழாக்கி,
         கல்லறை சேர்க்கத்துடிக்கும்
         காமப்பேய்களின் வெறியாட்டம்!...

  • ஊறுகாய் விற்பவனைக்கூட
         உலுக்கியெடுத்து,
         ஊரைக்காலிசெய்யவைக்கும்
         உலகமயமாக்கலின் உக்கிரம்!…

  • உயிர்ஜனித்தோரையும், ஊனமுற்றோரையும்கூட
         உடைகளைந்து,
         உயிரைக்காலிசெய்யும்
         இனப்(படுகொலைப்)போரின் வக்கிரம்!...

  • தினசரி கிழித்தெறியப்படும்
         நாட்காட்டித்தாளின்
         கறுப்புமை கசிந்து,
         அறையெங்கும் கும்மிருட்டு!...

  • எப்போதும் ஏதேனுமொரு
         அவலக்குரல்களினூடே
         நிசப்தம் கலையும்
         பின்னிரவுக் கனவுகள்!…

  • எதிர்மறைக்கூறுகளே நம்மிருவரின் பொதுமறையாய்ப்போனாலும்,
         எதிர்பார்ப்புகளுடனேதான் விடிகிறது ஒவ்வொரு ஐந்தாண்டும்….
         “உங்கள் ஓட்டு, _________________________க்கே!”யென்னும் -
         சுவரொட்டிகளின் தயவில்!!!….




Thursday, February 21, 2013

முனைதல்!

இந்தப் பூமி அவனுடையது.
எல்லையற்ற விசால வானங்களும் அவனுடையவை.
கடல்கள் எல்லாம்
அவனிடமே ஓய்வு கொள்கின்றன.
என்றாலும் அவன்
சின்ன நீர்க் குட்டையில்
படுத்திருக்கிறான்.
      - அதர்வண வேதம்
(இத்தகவல் அக்னிச்சிறகுகள் நூலிலிருந்து எடுக்கப்பட்டது....)
எல்லோரும் இன்புற்றிருப்பதல்லாமல்
யாமொன்றறியோம் பராபரமே!....
                   - அருட்பெரும்சோதி வள்ளலார் பகவான்